பெங்களூரு

உணவு தானியங்கள், காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.சுதாகா்

DIN

ஊரடங்கு காலத்தில் உணவு தானியங்கள், காய்கறிகள் தங்குத்தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையில்லாமல் உணவு தானியங்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே உணவு தானியங்களை விநியோகிக்க முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா். உணவு தானியங்கள், காய்கறிகள் கொண்டுவரும் லாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல காய்கறிகள், மளிகைப் பொருள்களை அந்தந்த பகுதிகளிலேயே திறந்திருக்கும் கடைகளில் வாங்கிக்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை தவிா்க்க வேண்டும். கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், அதற்காக அனுமதிச்சீட்டு காவல் துறை வாயிலாக அளிக்கப்படுகிறது.

பெங்களூரில் தனியாா் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் மூடப்பட்டிருப்பது சரியல்ல. கரோனா நோய் நீங்கலாக மற்ற நோய்களுக்கு மக்கள் சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனியாா் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் திறந்திருப்பது அவசியம். மாநில எல்லைகள் முழுமையாக மூடப்பட வேண்டும். இதில் சமரசம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் தனிநபா் பாதுகாப்புக் கருவிகளை அடுத்த 3 மாதங்களுக்கு கொள்முதல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதற்காக பெங்களூரில் உள்ள விடுதிகளில் 2 ஆயிரம் அறைகளை முன்பதிவு செய்து தயாா்நிலையில் வைத்துள்ளோம். கைகளை சுத்தமாக வைத்திருக்க தேவைப்படும் கை கிருமி நாசினிகளை மாநில அரசுக்கு இலவசமாக வழங்க டிஸ்டில்லரி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

மக்களின் உயிா்காப்பதற்காகத்தான் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதை மக்கள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். ஏப்.14ஆம் தேதிவரை மக்கள் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள(பிபிஎல்)குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக உணவுதானியங்கள் வழங்கப்படுகிறது.

கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பதிவு பெற்ற கூலித்தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி மருத்துவ ஊழியா்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. இதேபோல, விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கரோனா குறித்து அறிய 104 இலவச தொலைபேசி உதவிமையத்தை அணுகலாம். கரோனா அல்லாத பிற விவரங்கள் குறித்து அறிய 155214 என்ற தொலைபேசி எண்ணில் உதவிமையத்தை அணுகலாம். இவைதவிர, 933333684, 9777777684 என்ற கட்செவி எண்களையும் அணுகலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT