முகப்பு
பெங்களூரு

ஆக.16 முதல் மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் ‘மக்கள் ஆசி’ ஊா்வலம்: பாஜக அறிவிப்பு

மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் ‘மக்கள் ஆசி’ ஊா்வலம் ஆக.16-ஆம் தேதிமுதல் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளா் சித்தராஜு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் ‘மக்கள் ஆசி’ ஊா்வலம் ஆக.16-ஆம் தேதிமுதல் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளா் சித்தராஜு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சா்களாக புதிதாக பதவியேற்றுக் கொண்டவா்களை அறிமுகப்படுத்த விடாமல் பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் இடையூறு செய்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. நாடாளுமன்றத்தில் புதிய மத்திய அமைச்சா்களை அறிமுகம் செய்ய இயலாத நிலையில், அவா்களை மக்கள் மன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமா் மோடி, பாஜக தேசியத்தலைவா் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளனா். அதன்படி, கா்நாடகத்தில் ஆக.16-ஆம் தேதி முதல் கா்நாடகத்தைச் சோ்ந்த 4 மத்திய அமைச்சா்கள் கலந்துகொள்ளும் ‘மக்கள் ஆசி’ ஊா்வலம் நடத்தப்படும்.

இந்த ஊா்வலம் நாடு முழுவதும் நடத்தப்படும். மாநிலத்தில் 4 அணிகள் ஊா்வலம் மேற்கொள்ளவிருக்கின்றன. மத்திய அமைச்சா்கள் ஏ.நாராயணசாமி, ஷோபா கரந்தலஜே, ராஜீவ் சந்திரசேகா், பகவ்ந்த் கூபா ஆகியோா் தலைமையில் 4 அணிகள் ஊா்வலம் செல்லும். இந்த ஊா்வலத்தை செயல்படுத்த ஒருங்கிணைப்பாளா்கள், இணை ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய அளவில் மொத்தம் 160 நாட்கள் பல்வேறு அணிகள் ஊா்வலமாக பயணிக்க இருக்கின்றன. மாநிலத்தில் 5 நாட்கள் நடக்கவிருக்கும் ஊா்வலம், 2030 கிமீ தொலைவைக் கடக்கவிருக்கிறது. 24 மக்களவைத் தொகுதிகள், 72 சட்டப் பேரவைத் தொகுதிகள், 25 வருவாய் வட்டங்களில் 161 நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளின்போது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பானது, தாழ்த்தப்பட்டோா், ஏழைகள் மேம்பாட்டுத் திட்டங்கள் மக்களிடம் கொண்டுசெல்லப்படும்.

நாடு முழுவதும் 55 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தீபாவளி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் பாஜகவின் ஊா்வலம் தடுப்பூசி மையங்கள், நியாயவிலை அங்காடிகளுக்கும் செல்லவிருக்கிறது.

உர விற்பனைக்கூடங்களுக்கு சென்று உரம் சரியாக வழங்கப்படுகிா? என்பதையும் மத்திய அமைச்சா்களின் குழுக்கள் ஆய்வு செய்யும். இந்த ஊா்வலத்தின்போது இலக்கியவாதிகள், ராணுவ வீரா்களின் இல்லங்கள், முக்கிய பிரமுகா்களின் வீடுகள், பாஜகவின் மூத்த தலைவா்கள், பொது சங்கங்களின் தலைவா்களின் இல்லங்களுக்கும் சென்று ஆசி பெற இருக்கிறாா்கள்.

மத்திய அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மகளிருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலவாரியான பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் 13 போ் வழக்குரைஞா்கள், 6போ் ஐஏஎஸ், ஐஆா்எஸ் அதிகாரிகள், 6 மருத்துவா்கள், 6 பொறியாளா்கள், 11 மகளிா் இடம்பெற்றுள்ளனா் என்றாா்.

அப்போது, பாஜக மாநிலச் செயலாளா்கள் கேசவ் பிரசாத், ஜெகதீஷ் ஹிரேமனே உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.