இஸ்ரேல் - ஈரான் போர்: முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
தில்லியில் முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளது பற்றி...
மேற்காசியப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்புப் படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(மார்ச் 24) ஆலோசனை மேற்கொண்டார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலகம் முழுவதும் பதற்றம் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் பாதிப்பு, அதனால் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்காசியப் போர் நிலவரம் குறித்து தில்லியில் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான், தரைப் படை, கடற் படை, விமானப் படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்தும் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மையை மறுஆய்வு செய்யும் நோக்கிலும் இந்த கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.