ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!
ஈரான் போர் காரணமாக மக்கானா ஏற்றுமதியில் ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 500 கோடிக்கும்மேல் இழப்பு ஏற்பட்டது குறித்து...
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக மக்கானா (தாமரை விதைகள்) ஏற்றுமதி பாதிப்படைந்துள்ள நிலையில் பிகாரில் மட்டும் ஒரு மாதத்தில் ரூ. 500 கோடிக்கும்மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக, மக்கானா உள்பட பல பொருள்களின் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதால் அந்தப் பொருள்களின் தேவைகள் மற்றும் விலைகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. இதனால் வர்த்தகர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
பிகார் மாநிலம் பாட்னாவின் பிஹ்டாவில் உள்ள பிரின்ஸ்டன் மகத் உள்நாட்டு உலர் துறைமுகத்தில், ஈரான் போரின் காரணமாக ஏற்றுமதி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
இதுகுறித்து பிஹ்டா உலர் துறைமுகத்தின் பொறுப்பாளர் சுதிர் குமார் கூறுகையில், “போர் காரணமாக ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த நடவடிக்கைகள் மந்தமாகியுள்ளது. இதன் தாக்கம் சந்தையிலும் வெளிப்படுகிறது. இந்த சூழல் விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கானா உள்பட அரிசி, காய்கறிகள் போன்ற பொருள்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வளைகுடா நாடுகளான சௌதி அரேபியா, கத்தார் உள்பட ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், உலகளவில் மக்கானா உற்பத்தியில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பை பிகார் வழங்குவது குறிப்பிடத்தக்கது.