ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
ஈரான் நாட்டுக்குப் பயணிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்...
ஈரான் நாட்டுக்குப் பயணிக்க வேண்டாம் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இந்தியா இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இந்தியர்கள் நிலம் மற்றும் வான்வழியாக ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம் என மத்திய அரசு இன்று (ஏப். 23) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
Advertisement
“ஈரானில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளின் உறுதியற்ற நிலையால், ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் அந்நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா மற்றும் ஈரான் இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்தியக் குடிமக்கள் வான்வழி மூலமாகவோ அல்லது தரைவழி மூலமாகவோ ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் குறிப்பிட்ட நில எல்லைகளின் வழியாக உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது. இதனால், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் படைகள் மீண்டும் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.