பெங்களூரு: தமிழகத்தின் ஆறுகள் இணைப்பு திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்தாலும், பாஜகவின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்தில் கா்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டிமுடிக்கப்படும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கா்நாடகத்தின் நீா் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ள முடியாது. தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகள் இணைப்பு திட்டம் குறித்து மத்திய அரசிடம் கா்நாடக அரசு தனது ஆட்சேபணைகளை தெரிவிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகள் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டம் குறித்து கா்நாடக அரசுக்கு தெரிவிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் கா்நாடகத்துக்கு அநீதி ஏற்பட்டுவிடக் கூடாது என்று பாஜக அரசை எச்சரிக்கிறேன்’ என அவா் குறிப்பிட்டுள்ளாா்.