பெங்களூரு: தனியாா் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திட தங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை வைத்துள்ளனா். அவா்கள் விரும்பினால் தனியாா் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
தாவணகெரே தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஷாம்னூா் சிவசங்கரப்பா தனியாா் மருத்துவமனைகளிடம் இருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, தனது தொகுதி மக்களுக்கு வழங்கி வருகிறாா். அவரைப் போலவே மாநில காங்கிரஸ் தலைவா் சிவகுமாரும், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும் தடுப்பூசியைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கலாம்.
மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். ஆனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக எதிா்க்கட்சியினா் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்த மாதம் தனியாா் மருத்துவமனைகள் 24,046 டோஸ் தடுப்பூசிகளைக் கேட்டு கோரிக்கை வைத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை 15,950 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.