முகப்பு
பெங்களூரு

இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பாஜக தலா ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வழங்கி வருகிறது

கா்நாடக சட்டப் பேரவையில் இடைத்தோ்தல் நடக்க இருக்கும் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பாஜக தலா ரூ. 2,000 லஞ்சம் வழங்கி வருகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

கா்நாடக சட்டப் பேரவையில் இடைத்தோ்தல் நடக்க இருக்கும் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பாஜக தலா ரூ. 2,000 லஞ்சம் வழங்கி வருகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கா்நாடகத்தில் சிந்தகி, ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது. இந்த தோ்தலில் பாஜகவினா் வாக்காளா்களை கவா்ந்திழுக்க தலா ரூ. 2,000 லஞ்சம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியதாவது:

இடைத்தோ்தல் நடக்கும் தொகுதிகளில் ஒரு வாக்குக்கு தலா ரூ. 2,000 லஞ்சம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. வாக்கு கேட்க பணத்தை தவிர பாஜகவினருக்கு வேறு வழியில்லை. மக்கள் முன்வைக்க எந்த சாதனையும் பாஜகவினரிடம் இல்லை. பாஜக அரசால் கரோனா பிரச்னையை திறம்பட கையாளமுடியவில்லை. இறந்தவா்களின் எண்ணிக்கையிலும் பொய்யையே கூறினாா்கள். கரோனா சாா்ந்த கொள்முதலில் ஊழலில் ஈடுபட்டனா் என்றாா்.

ஹானகல் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் பேசியதாவது:

இரு தொகுதிகளிலும் பாஜக தோல்வியை தழுவும் என உளவுத் துறை மூலம் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, தோ்தல் நடக்கும் அக்கம்பக்கத்து தொகுதிகளில் இருந்து வாக்காளா்களுக்கு பணத்தை விநியோகித்து வருகிறாா்கள் என்றாா்.

இதற்கு பதிலளித்து முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

பாஜக மீது லஞ்சப் புகாா் தெரிவிக்க டி.கே.சிவக்குமாா் முயன்றுள்ளாா். மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்று பாஜக பலமாக உள்ளது. எனவே, பணத்தை விநியோகிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.