முகப்பு
தமிழ்நாடு

விஜய்யை முதல்வராக்க தில்லிகூட ரெடி: ஆதவ் அர்ஜுனா

தவெக கொள்கையிலிருந்து வெளிவந்தால், விஜய்யை முதல்வராக்க தில்லி தயாராக இருப்பதாக ஆதவ் அர்ஜுனா பேச்சு

Updated On : 22 மார்ச், 2026 at 4:39 AM
தவெக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையிலிருந்து வெளிவந்தால், விஜய்யை முதல்வராக்க தில்லி தயாராக இருப்பதாக கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் சென்றுவிடும்; பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவருக்கு (விஜய்) சிபிஐ அழுத்தம் கொடுக்கிறது என்றெல்லாம் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூவரும் சேர்ந்து பிரசாரம் செய்தனர்.

ஆனால், மிரட்டுபவர்கள்தான் பயப்படுபவர்கள் என்று அர்த்தம். அமைதியாக இருப்பவர்கள்தான் தைரியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். காலை, மதியம், இரவு என தினமும் பேசுபவருக்குத்தான் அரசியல் என்றால் என்ன என்பது தெரியவில்லை.

பாஜகவின் பி டீம் என்று தவெகவை சொன்னார்கள், அவர்களுடன் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொன்னார்கள். அப்படியென்றால், ஜனவரி 10 ஆம் தேதியிலேயே ஜன நாயகன் வெளியாகி, விஜய் ரூ. 1,500 கோடி சம்பாதித்திருப்பார்.

தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையில் தலைவர் உறுதியாக இருந்ததால்தான், திமுக மற்றும் முதல்வர் பேரனின் படம் ஜனவரியில் வெளியானது; இன்றுவரையில் ஜன நாயகன் முடக்கப்பட்டது.

மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து அவர் (விஜய்) வெளிவந்திருந்தால், அவரை முதல்வர் என்று சொல்வதற்கு தில்லிகூட தயாராக இருக்கிறது.

திருமாவளவன் மீது எனக்கு அன்பு இருக்கிறது. இவர்களையெல்லாம் (திமுக) நம்பாதீர்கள் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். இதைச் சொன்னதற்காகத்தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள்.

நாம் எந்த வகையிலும் வலிமை பெறக்கூடாது என நினைப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்று திருமாவளவன் கூறினார். அப்படியென்றால், திமுகவை பற்றித்தான் அவர் பேசுகிறார்.

நாம் வளர வேண்டும் என்று வாழ்த்தவோ ஊக்குவிக்கவோ இங்கு யாருமில்லை என்பதே எதார்த்தமான உண்மை என்று எவ்வளவு வலியுடன் திருமாவளவன் சொல்லியிருப்பார். அவரது கண்களில் கண்ணீர் மட்டும்தான் வரவில்லை.

திமுக பண்ணையார்த்தனத்தில் இருந்து மாறவேயில்லை. முதல்வர் ஸ்டாலின் வந்தால் மாறுவர் என்று நினைத்தோம்; ஆனால், மாறவேயில்லை. 2011-ல் விசிகவுக்கு கலைஞர் 10 தொகுதிகள் கொடுத்தார்.

எப்படி மதிமுகவை முடித்தார்களோ, அதுபோலவே விசிகவை முடிக்கவும் அவர்கள் தயாராகி விட்டனர்" என்று தெரிவித்தார்.

summary

Delhi is also ready to make Vijay the Chief Minister: TVK Leader Aadhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.