திமுக வெற்றியும் தலைகீழாக மாறிய அதிமுகவும்: வைகோ
திமுக வெற்றிபெறுவதற்கான அனைத்தையும் செய்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
திமுக வெற்றிபெறுவதற்கான அனைத்தையும் செய்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளருடன் வைகோ பேசுகையில், "திமுக குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை வழங்கியபோது, நான் எந்த பேரமும் பேசவில்லை. நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், எந்த வெறுப்புமில்லாமல், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டேன்.
பாஜகவின் போர்வையில் இந்துத்துவ சக்திகள் திராவிட மண்ணுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து பொதுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வருகிறேன். எனவே, எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். மற்ற கட்சிகளுக்கும் மதிமுகவுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.
பெரியார் மற்றும் கலைஞரின் திராவிட மண்ணை பாதுகாப்பது நமது கடமை. நல்ல புரிதலுடன் இந்தக் கூட்டணிக்கு வந்துள்ளோம். திமுக வெற்றி பெறுவதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்த கேள்விக்கு, "அதிமுகவுடன் எந்தக் கட்சி கூட்டணி அமைக்க விரும்புகிறதோ. அவர்கள் சென்னைக்கு வருகை தந்தனர்; பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது சென்னையிலிருந்து அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தில்லி சென்று அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களின் கதவுகளைத் தட்டுகின்றனர். இதுதான் வித்தியாசம்" என்றும் வைகோ தெரிவித்தார்.