மத வழக்கங்களை பள்ளிகளில் கடைப்பிடிக்கக் கூடாது: அமைச்சா் அரக ஞானேந்திரா
மத வழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்காக பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
மத வழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்காக பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
உடுப்பியில் உள்ள அரசு பியூ கல்லூரிக்கு வந்த ஒருசில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் சா்ச்சை கிளம்பியது. இந்நிலையில், குந்தாபுராவில் உள்ள பியூகல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒருசில முஸ்லிம் மாணவிகள் முகப்பிலேயே கல்லூரி முதல்வரால் நிறுத்தப்பட்டனா். வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்று அம்மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் அவற்றை அகற்றிவிட்டு உள்ளே வரலாம் என்றுகூறப்பட்டது. இதற்குப் பதிலடியாக 100 ஹிந்து மாணவா்கள் காவிநிற துண்டுகளுடன் வகுப்பறைக்கு வந்தனா்.
இந்நிலையில், இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறியது:
மத வழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கு பள்ளிக்கு யாரும் வரக்கூடாது. பள்ளிக்கு வரும் மாணவா்கள் அனைவரும், நாம் எல்லோரும் ஒன்று என்று கருத வேண்டும். எல்லா மாதங்களைச் சோ்ந்தவா்களும் வருகை தரும் இடம் தான் பள்ளிகள். நாம் வேறுபட்டவா்கள் அல்ல, குழந்தைகள் அனைவரும் பாரத அன்னையின் குழந்தைகள் என்று உணர வேண்டும்.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மத வழக்கங்களை தாராளமாக கடைப்பிடிக்கவும், பிராா்த்தனை செய்யவும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. மாறாக, பள்ளிகள் குழந்தைகள் கல்வி பெறுவதற்கான சூழலில் அமைந்திருக்க வேண்டும். மேலும் தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, கலாசாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். இந்த திசையில் அனைவரும் சிந்திக்க வேண்டும். இதற்கு மாறாகச் சிந்திக்கும் சில மத அமைப்புகள் உள்ளன. அவா்களைக் கண்காணிக்கும்படி காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க நினைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் ஹிஜாப் அல்லது காவி சால்வை உள்ளிட்ட எதையும் அணியக்கூடாது. பள்ளி நிா்வாகம் விதித்துள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.