முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’

கட்சி மாறி வாக்களித்தது ஏன்? எம்எல்ஏக்களை ‘சஸ்பெண்ட்’ செய்து பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவு!

Updated On : 21 மார்ச், 2026 at 4:09 PM
நவீன் பட்நாயக் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பு - PTI
பகிர்:

புவனேசுவரம் : மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களித்த புகாரில் பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து 6 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை(மார்ச் 21) ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரத்தில் 7 இடங்கள், தமிழகத்தில் 6 இடங்கள், மேற்கு வங்கம், பிகாரில் தலா 5 இடங்கள், ஒடிஸாவில் 4 இடங்கள், அஸ்ஸாமில் 3, சத்தீஸ்கா், ஹரியாணா, தெலங்கானா மாநிலங்களில் தலா 2 இடங்கள், ஹிமாசல பிரதேசத்தில் 1 என மொத்தம் 11 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மாா்ச் 16 தோ்தல் நடைபெற்றது. ஒடிஸாவில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக்கள் மீது புகார் எழுந்தது.

ஒடிஸாவில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அம்மாநில பேரவையில் மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக மற்றும் அதற்கு ஆதரவான சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சேர்த்து அவர்களுக்கு மொத்தம் 82 வாக்குகள் பதிவாகியிருக்க வேண்டும். இந்நிலையில், மேற்கண்ட தரப்புக்கு பதிவான வாக்குகளோ 93.

பேரவையில் அவர்களுக்கு 11 வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. அவற்றுள் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் 8 பேரும் காங்கிரஸிலிருந்து மூவரும் கட்சி மாறி வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களித்தது ஏன்? என மேற்கண்ட எம்எல்ஏக்கள் அனைவரிடமும் விளக்கம் கேட்டு கடந்த மார்ச் 17-இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு விளக்கமளித்து அவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 20) மாலை பதிலளித்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் தெரிவித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று ஒடிஸா பேரவை பிஜு ஜனதா தள தலைமைக் கொறடா பிரமிளா மாலிக் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சக்ரமணி கணார் (பலிகுடா தொகுதி), நாபா கிஷோர் மாலிக் (ஜெயதேவ் தொகுதி), சௌவிக் பிஸ்வால் (சௌத்வார்-கட்டக் தொகுதி), சுபாஷிணி ஜெனா (பஸ்தா தொகுதி), ராமகந்த போய் (தீர்தோல் தொகுதி), தேவி ரஞ்சன் திரிபாதி (பங்கி தொகுதி) ஆகிய ஆறு பேரவை உறுப்பினர்களையும் பிஜு ஜனதா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.

ஒடிஸா பேரவை எதிர்க்கட்சிகளின் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டி (பிஏசி) ஆலோசனைக் கூட்டம் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. அதன் முடிவில், மேற்கண்ட முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

summary

The Biju Janata Dal on Saturday suspended six of its MLAs for cross-voting during the recent election to four Rajya Sabha seats from Odisha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.