தொகுதி மாறி போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல், பழனி தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2026 தேர்தலில் பரஸ்பரம் தொகுதி மாறி களமிறங்கியுள்ளனர்.
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலின்போது அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என். பாண்டி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதேபோல, பழனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவி மனோகரன், திமுக சார்பில் பெ.செந்தில்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திண்டுக்கல்லில் சீனிவாசனும், பழனியில் செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், 2026 தேர்தலிலும் இதே வேட்பாளர்களுக்கே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர்கள் அதே தொகுதிகளில் தொடரும் நிலையில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவரும் பரஸ்பரம் தொகுதி மாறியுள்ளனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இருவரும் (சீனிவாசன், செந்தில்குமார்) திண்டுக்கல்லில் போட்டியிடுவதால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இதேபோல, கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இருவரும் (ரவி மனோகரன். பாண்டி) பழனியில் போட்டியிடுகின்றனர்.