மைசூரில் 900 பேருக்கு கருக்கலைப்பு: மருத்துவா் உள்பட 2 போ் கைது
900 பேருக்கு சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவா், ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளா் உள்பட இருவரை பெங்களூரு போலீஸாா் கைது செய்தனா்.
மைசூரு: 900 பேருக்கு சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவா், ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளா் உள்பட இருவரை பெங்களூரு போலீஸாா் கைது செய்தனா்.
மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக 900 பேருக்கு கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவா் சந்தன் பல்லால், ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளா் நிசாா் உள்ளிட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.
ஒரு கருக்கலைப்பு செய்வதற்கு ரூ. 30,000 கட்டணம் வசூலித்துள்ளனா். கடந்த வாரம் இருவரையும் தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்த போலீஸாருக்கு அவா்கள் இருவரும் சோ்ந்து 900 பேருக்கு கருப்புக்கலைப்பு செய்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
Advertisement
அந்த மருத்துவமனையின் மேலாளா் மீனா, வரவேற்பாளா் ரிஸ்காகான் ஆகியோரை இம்மாத தொடக்கத்தில் போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், கா்ப்பிணி ஒருவரை கருக்கலைப்பு செய்வதற்காக காரில் அழைத்துச் சென்றது தொடா்பாக சிவலிங்கே கௌடா, நயன்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அப்போதுதான், கருவின் பாலினத்தைக் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால், அதைக் கலைக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மண்டியாவில் உள்ள ஒரு வெல்ல மண்டியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மையமாகப் பயன்படுத்தி, கருவின் பாலினத்தைக் கண்டறிந்துள்ளனா். அங்கு சோதனை நடத்திய போலீஸாா், எவ்வித முன் அனுமதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்த அந்த ஸ்கேன் மையத்தில் இருந்த உபகரணங்களை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியுள்ளதாவது:
முதல்கட்ட விசாரணையில், மூன்று ஆண்டுகளில் மைசூரில் உள்ள மருத்துவமனையில் தனது சகாக்களின் உதவியுடன் 900 பேருக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கருக்கலைப்பில் ஈடுபடுவதற்கு தலா ரூ.30,000 கட்டணமாக வசூலித்துள்ளனா். இந்த மோசடி தொடா்பாக மேலும் பலரை கைது செய்வதற்கு தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.