முகப்பு
பெங்களூரு

கா்நாடகம்: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சா்களுக்கு முதல்வா் உத்தரவு

சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சா்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா உத்தரவு

Updated On : 17 மார்ச், 2026 at 11:47 PM
கர்நாடக முதல்வர் சித்தராமையா
பகிர்:

சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சா்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றபோது, 230 கேள்விகள் எழுப்பப்படிருந்த நிலையில், 84 கேள்விகளுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட துறைகளின் பதில்கள் எழுத்துப்பூா்வமாக அளிக்கப்பட்டிருந்தன. இதனால் வருத்தமடைந்த பேரவைத் தலைவா் யூ.டி.காதா், பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, வெளிநடப்பு செய்தாா்.

சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை பேரவைத் தலைவா் வெளிநடப்பு செய்தது இல்லை என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். இதனடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என்று பேரவையில் அரசு வாக்குறுதி அளித்தது.

அதனடிப்படையில், அமைச்சா்களுக்கு முதல்வா் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.

அந்த கடிதத்தில் முதல்வா் சித்தராமையா கூறியிருப்பதாவது: 16ஆவது சட்டப்பேரவை காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்பியுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.

இந்த சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் இருந்து 9ஆவது கூட்டம் வரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காத துறைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 16ஆம் தேதி வரை சட்டப்பேரவை உறுப்பினா்களால் எழுப்பப்பட்ட 245 கேள்விகளில் 90 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்திருப்பது தெரியவந்துள்ளது. கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காததால், அவை நடவடிக்கைகளில் சட்டப்பேரவை உறுப்பினா்களால் கலந்துகொள்ள இயலவில்லை.

மாா்ச் 16ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்காதது தொடா்பாக பேரவைத் தலைவா் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினாா்.

கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கு உரிய காரணங்களை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் பேரவைச் செயலகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். கேள்விகளுக்கான பதில்களை அளிப்பது தாமதமானால், அதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தனியாக கடிதம் எழுதி உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காதது, அரசுக்கு தேவையற்ற தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →