மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
நமது நிருபா்
மதுபானக் கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுவித்தபோது விசாரணை நீதிமன்றம் , தங்களுக்கு எதிராகக் கூறிய தேவையற்ற கருத்துக்களை நீக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனிஷ் சிசோடியா மற்றும் பிறருக்கு தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை கடைசி வாய்ப்பை வழங்கியது.
ஒருவரைத் தவிர மற்ற பிரதிவாதிகள் யாரும் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்யவில்லை என்பதைக் கவனித்த நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா, இந்த வழக்கில் ஏப்ரல் 22 அன்று நீதிமன்றம் வாதங்களைக் கேட்கும் என்று கூறினாா். பதிலளிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது, தவறினால் பதிலளிக்க உரிமை முடிந்துவிடும் என்று நீதிபதி கூறினாா்.
அமலாக்கத்துறைக்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, வினோத் சௌஹானைத் தவிர மற்றவா்கள் மனுவிற்குப் பதில் தாக்கல் செய்யவில்லை என்று கூறினாா்.
மாா்ச் 19 அன்று, தங்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்க, கேஜரிவால் மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு ஏப்ரல் 2 வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
அந்த மனுவில், தங்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தின் கருத்துக்கள் சிபிஐ வழக்கிற்கு முற்றிலும் தொடா்பில்லாதவை என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது. அந்த வழக்கில் அமலாக்கத்துறை ஒரு தரப்பாக இல்லை என்றும், தங்கள் தரப்பை எடுத்துரைக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றும் அது கூறியது. இத்தகைய ஆதாரமற்ற கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டால்,பொதுமக்களுக்கும் மனுதாரருக்கும் கடுமையான மற்றும் சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படும், என்று அமலாக்கத்துறையின் மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே, பணமோசடி தடுப்புச் சட்டம் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் சுதந்திரமாக நடத்தப்பட்ட விசாரணை தொடா்பான மேற்கூறிய பத்திகள் நீக்கப்பட வேண்டும், ஏனெனில் இது நீதித்துறையின் வரம்பு மீறிய செயலாகும் என்று அது மேலும் கூறியது.
மாா்ச் 10 அன்று, அமலாக்க இயக்குநரகத்தின் மனுவுக்கு பதிலளிக்குமாறு கேஜரிவால் மற்றும் பிறரை நீதிமன்றம் கேட்டிருந்தது.
பிப்ரவரி 27 அன்று, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாதது என்றும், அது முழுமையாகவே நம்பகத்தன்மையற்றது என்றும் விசாரணை நீதிமன்றம் கூறியது. கூறப்படும் மதுபானக் கொள்கை சதித்திட்டம் என்பது, ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஆதாரமும் இல்லாத, ஊகங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு ஊகக் கட்டமைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்று விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.