அரசு குடியிருப்பில் மின்மாற்றி அமைக்க ரூ.35 லட்சம் கட்டணம்
புதுச்சேரி, ஏப். 5: புதுச்சேரியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டு, ஏழை மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க 168 பயனாளிகளிடமிருந்து
புதுச்சேரி, ஏப். 5: புதுச்சேரியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டு, ஏழை மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க 168 பயனாளிகளிடமிருந்து ரூ.35 லட்சம் கேட்கிறது குடிசை மாற்று வாரியம்.
புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை வீடுகளில் குடியிருந்த மக்கள், அப்போது வீசிய புயலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து குடிசை மாற்று வாரியத்தால் 1980-ம் ஆண்டுகளில் 168 ஏழைக் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ரூ.5 வாடகைக்கு விடப்பட்டன. பின்னர் இது படிப்படியாக ரூ.25 வரை உயர்ந்தது.
இந்நிலையில், கட்டடம் வலுவிழந்து இடிந்து விழத் தொடங்கியது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குடியிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கட்டடம் இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டப்பட்டு, முன்பு குடியிருந்த அனைவருக்கும் அதே இடங்களை ஒதுக்கவும் முடிவானது.
Advertisement
இதன்படி வாழைக்குளம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 120 வீடுகளுக்கான சாவிகள் இதுவரை உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதுள்ள 46 குடியிருப்புகளுக்கு உரிய பயனாளிகள் விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த 168 வீடுகளுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.35.26 லட்சம் தேவைப்படுகிறது. இந்த தொகையை 168 பயனாளிகளும் நபர் ஒருவருக்கு ரூ.20,990 வீதம் செலுத்த வேண்டும். கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாள்களுக்குள் இத்தொகையை அளிக்க வேண்டும் என்று கடந்த 28-ம் தேதி குடிசை மாற்று வாரியத்திலிருந்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அங்கு வசிப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவை புதியதாகக் கட்டப்பட்ட குடியிருப்புகள் இல்லை. ஏற்கெனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை 168 வீடுகளுக்கு இங்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. இடித்து கட்டப்பட்ட காலத்தில், இந்த மின் இணைப்பை வேறு பகுதிகளுக்குத் திருப்பிவிட்டனர். அதனால், புதிதாக மின் மாற்றி அமைக்காமல் இந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு தரமுடியாத நிலை இருக்கிறது.
இதற்காகத்தான் மின்வாரியத்துக்கு ரூ.35 லட்சத்தை செலுத்த குடிசை மாற்று வாரியம் வீட்டுக்கு தலா ரூ.21 ஆயிரம் கேட்கிறது என்கின்றனர் பொதுமக்கள்.
வணிக நோக்கத்தில் கட்டப்படும் கட்டடங்கள், புதியதாக தனிநபர்களால் உருவாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு அளிக்க கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், அரசால் கட்டப்பட்டு, ஏழைகளுக்கு வாடகைக்கு அளிக்கப்படும் வீடுகளுக்கு, குடியிருக்க வருபவர்களிடம் மின் மாற்றிக்கான கட்டணத்தைக் கேட்பது எந்த வகையில் நியாயம். வீடுகளைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டுச் சென்றால், கட்டிய பணத்தைத் திருப்பித் தருவார்களா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து கே.லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, தினமணி செய்தியாளரிடம் கூறியது:
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் முதல்வர், அமைச்சர், நிதித்துறைச் செயலர் என அனைவரிடமும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டது. ஆனால் பதில் இல்லை. இந்த தொகையை யாரும் கட்டப் போவதில்லை. அவர்களால் கட்டவும் முடியாது. ஏழை மக்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள். கூடிய விரைவில் இதுதொடர்பான போராட்டம் நடைபெறும் என்றார்.