நிரப்பப்படாத வி.ஏ.ஓ. பணியிடங்களால் புயல் நிவாரணப் பணிகளில் மந்தம்
சிதம்பரம், ஜன. 4: கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் புயல் பாதிப்பு, நிவாரணம் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடல
சிதம்பரம், ஜன. 4: கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் புயல் பாதிப்பு, நிவாரணம் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 603 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் 248 இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக சிதம்பரம் தாலுகாவில் மட்டும் 89 பணியிடங்களும், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் 55 இடங்களும் காலியாக உள்ளன.
ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பணியாற்றும் நிலை உள்ளது. இதனால் புயலில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இவர்களால் உடனடியாகச் செல்ல முடியவில்லை. இதனால் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க இயலாமல் போனது.
பல்வேறு கிராமங்களில் நிவாரண கணக்கெடுப்பு, பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு, மீட்புப் பணி ஆகியவற்றை உடனடியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் 80 சதவீதத்திற்கும் மேலாக நெல் பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் முழுமையாகப் சேதமடைந்துள்ளன. பகுதி, முழுமை என்ற பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது.
எனவே, புதுச்சேரி அரசு அறிவித்தது போல் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கினால் எந்த குழப்பமும் ஏற்படாது என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை விரைந்து நிரப்பினால் தான், நாட்டின் அடித்தளமாக உள்ள கிராமப்புறங்களில் அரசின் திட்டங்களை செம்மையாக செயல்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.