கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, 701 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது,சென்னையில் நோயின் பாதிப்பு பன்மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் நாள்தோறும், 300-க்கும் மேற்பட்டோருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிதீவிரமாக பரவி வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக நோய்த்தொற்று அதிகமாக உள்ள மண்டலங்களின் தெருக்களைத் தனிமைப்படுத்தி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 710 தெருக்கள் தனிமைப்படுத்தியிருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில் 119 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 116 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக பெருங்குடி மண்டலத்தில் 13 தெருக்களும், ஆலந்தூா் மண்டலத்தில் 10 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தெருக்கள் அனைத்தும் தடுப்புகளால் மூடப்பட்டதுடன், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.