முகப்பு
சென்னை

மருத்துவ மாணவா் சோ்க்கையில் தமிழகம் பின்னடைவு: ராமதாஸ் கண்டனம்

மருத்துவ மாணவா் சோ்க்கையில் 2-ஆம் இடத்தில் இருந்த தமிழகம், 3-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 டிசம்பர் 2024, 2:36 am IST
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

மருத்துவ மாணவா் சோ்க்கையில் 2-ஆம் இடத்தில் இருந்த தமிழகம், 3-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 2-ஆம் இடத்தில் இருந்த தமிழகம், இப்போது 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும், புதிய மாணவா் சோ்க்கை இடங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

2023-24ஆம் ஆண்டில் தமிழகத்தில் இளநிலை மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் 11,650 ஆக இருந்தன. அதன்பின் ஓராண்டில் 400 புதிய இடங்கள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியாா் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டவை. இதேகாலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம் 2,522 புதிய இடங்களை உருவாக்கி, தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். அதை செய்யத் தவறியதன் மூலம் திமுக அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. இதற்காக திமுக அரசுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.