சென்ட்ரல் - பரங்கிமலை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை சென்ட்ரலிலிருந்து பரங்கிமலை செல்லும் பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
சென்னை: சென்னை சென்ட்ரலிலிருந்து பரங்கிமலை செல்லும் பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், காலை 9.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் - பரங்கிமலைக்குச் செல்லும் பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதன்படி, 3 நிமிஷ இடைவெளியில் இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில்கள் அனைத்தும் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தது. அதன்பிறகு சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில், மீண்டும் வழக்கம்போல 3 நிமிஷ இடைவெளியில் இயக்கப்பட்டது.