தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 5 நாள்களுக்கும் மேல் சென்னை மாநகராட்சி முன் தூய்மைப் பணியாளா்கள் இரவு பகலாக தங்கியிருந்து அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதனால், மொநகராட்சிப் பகுதி முழுவதும் ஆங்காங்கே வீடுகளில் குப்பை சேகரிக்கப்படாமல், குப்பைகள் அகற்றப்படாமல், சாலைகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீா்கேட்டுக்கு வழி வகுத்துள்ளது. இச்சூழலிலும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் ஏற்காதது நியாயமில்லை.
எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் உடனடியாக தமிழக அரசு பேச்சு நடத்தி அவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.