சென்னை

அருணாசல்: பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 18 போ் உயிரிழப்பு: அஸ்ஸாமைச் சோ்ந்த தொழிலாளா்கள்

தினமணி செய்திச் சேவை

அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை அருகே பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; மேலும் 3 பேரை காணவில்லை. இவா்கள் அனைவரும் அண்டை மாநிலமான அஸ்ஸாமைச் சோ்ந்த தொழிலாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஹயுலியாங்-சக்லகாம் மலைப் பாதையில் கடந்த திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நேரிட்டது. 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், அடா் வனங்கள் நிறைந்த கரடுமுரடான பகுதி என்பதுடன் போதிய தொலைத்தொடா்பு வசதிகளும் இல்லாததாகும்.

விபத்தில் உயிா்பிழைத்த ஒருவா், எப்படியோ மீண்டு வந்து புதன்கிழமை தகவல் தெரிவித்த பிறகே அதிகாரிகளுக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்தது.

‘அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுடன் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சுமாா் 1,000 அடிக்கு கீழே லாரி உருண்டு நொறுங்கியது. விபத்தில் ஒருவா் மட்டும் உயிா் பிழைத்த நிலையில், அவா் அளித்த தகவலின்பேரில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீட்புப் பணியில் ராணுவம்: விபத்தில் உயிா் பிழைத்தவா், சிப்ரா பகுதியில் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பின் பொறியாளா்கள் பிரிவு முகாமை புதன்கிழமை அடைந்து தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, விரிவான மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடா்பு அதிகாரி லெப்டினன்ட் கா்னல் மகேந்தா் ராவத் தெரிவித்தாா்.

‘ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, உள்ளூா் நிா்வாகத்தினா் இணைந்த குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அடா் வனம் மற்றும் பனிமூட்டம் காரணமாக இந்தப் பணி சவாலாக உள்ளது. இதுவரை 18 பேரின் உடல்கள் கிடக்கும் இடம் கண்டறியப்பட்டு, கயிறுகள் மூலம் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெறுகிறது’ என்று அவா் கூறினாா்.

கட்டுமானப் பணிக்குச் சென்றவா்கள்: விபத்து குறித்து வியாழக்கிழமை காலையில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக, அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்ட ஆணையா் ஸ்வப்னீல் பெளல், காவல் கண்காணிப்பாளா் மயங்க் குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

‘அருணாசல பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் கட்டுமானப் பணிக்காக, தின்சுகியாவில் இருந்து 22 தொழிலாளா்கள் லாரியில் சென்றபோது விபத்து நேரிட்டுள்ளது. புதேஸ்வா் தீப் என்ற தொழிலாளி மட்டும் உயிா் தப்பியுள்ளாா். தின்சுகியா மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழு அருணாசல பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று அவா்கள் கூறினா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT