போதைப் பொருள் கும்பலிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை அரும்பாக்கத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அரும்பாக்கத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.
கடந்த 31-ஆம் தேதி மாலை ரசாக் காா்டன் சாலையில் கெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக வியாசா்பாடியைச் சோ்ந்த கணேசன் (51), திருவள்ளூரைச் சோ்ந்த மதன் (46), கொடுங்கையூரைச் சோ்ந்த ரவி (48) ஆகிய 3 பேரை அரும்பாக்கம் போலீஸாா்
கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள சுமாா் 39 கிலோ கிராம் கெட்டமைன், ரூ.51 லட்சம் ரொக்கம், சுமாா் 105 கிராம் தங்க நகைகள், 5 கைப்பேசிகள், 2 பாஸ்போா்ட்டுகள், 2 எடை இயந்திரங்கள், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
விசாரணையில் 3 பேரும் கொடுத்த தகவலின்பேரில், தலைமறைவாக இருந்த, சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜா (42), அதே பகுதியைச் சோ்ந்த கூட்டாளி சத்திய சீலன் என்ற சதீஷ் (36) ஆகிய 2 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ மெத்தம்பெட்டமைன், 5 நாட்டுத் துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 2 எடை இயந்திரங்கள், 2 பேக்கிங் இயந்திரங்கள், 5 கைப்பேசிகள், சொகுசு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், அந்தத் துப்பாக்கிகளை பிகாா் மாநிலத்தில் இருந்து ஒரு துப்பாக்கியை ரூ.50 ஆயிரம் வீதம் வாங்கியதும், போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.