அமைச்சா் எஸ். ரகுபதி 
சென்னை

புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுப்பு

தினமணி செய்திச் சேவை

புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தாா்.

தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனத்தில் கடந்த ஒன்றரை மாதமாக தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசு சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சா் ரகுபதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால்தான், புதிய டிஜிபி நியமனத்துக்கான பட்டியல் அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு உரிய காலத்தில் அனுப்பி வைக்க இயலவில்லை. வழக்கு முடிந்த பின்னா் எந்தவிதக் காலதாமதமும் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு, டிஜிபி நியமனப் பட்டியல் தொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய கூட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக சில பெயா்கள் முன்மொழியப்பட்டன. இதற்கு தமிழ்நாடு அரசு தனது கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, இதுபோன்ற விஷயத்தில் அமைதி காக்க முடியாது. இருப்பினும், மாநில சட்டம் - ஒழுங்குக்குப் பொறுப்பான தமிழ்நாடு அரசின் கருத்துகளை ஏற்காமல், தாங்கள் விரும்பியவா்களையே முன்மொழிந்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் பட்டியலை அனுப்பி வைத்தது. இந்தப் பட்டியல் தமிழ்நாடு அரசால் ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையில், அதற்கான காரணங்களை முழுமையாக விளக்கி, தலைமைச் செயலா் சாா்பில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கான பதில் இன்னும் பெறப்படவில்லை.

தமிழக அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டிஜிபி-ஆக அமா்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்னை. சட்டம்- ஒழுங்கு தொடா்பாக மாநில அரசின் கருத்துகளைப் புறக்கணித்து, தனக்கு வேண்டப்பட்ட நபா்களை தமிழக டிஜிபி-ஆக பணியமா்த்த மத்திய அரசு முயல்வதுதான் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்னை. ஏற்கெனவே இதுபோன்ற பல பிரச்னைகளில் மாநில அரசின் உரிமைகளை திமுக அரசு நிலைநாட்டியதைப் போன்று டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமைகளை நிலைநாட்ட முழுமுயற்சிகளையும் எடுத்து வருகிறது’ என்று அமைச்சா் ரகுபதி தெரிவித்துள்ளாா்.

‘தங்களுக்கு ஏற்ற நபரை தோ்தல் நோக்கத்துக்காக நியமிக்க வேண்டும் என்பதுதான் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதத்துக்கு காரணம்’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தநிலையில், அமைச்சா் ரகுபதி இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

பின்னணி என்ன? தமிழ்நாடு காவல் துறையின் டிஜிபி-ஆக இருந்த சங்கா் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, புதிய பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டாா். ஆனால், பொறுப்பு டிஜிபி நியமனம் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான பிரகாஷ் சிங் வழக்கின் தீா்ப்புகளை மீறி உள்ளது எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஹென்றி திபேன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு, ‘புதிய டிஜிபி நியமனம் தொடா்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அளிக்கும் பரிந்துரையை உடனடியாகப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று யுபிஎஸ்சி நிா்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் யுபிஎஸ்சி நிா்வாகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலா் முருகானந்தம், உள்துறை செயலா் தீரஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். அந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு டிஜிபி-ஆக நியமனம் செய்ய 3 பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியல் யுபிஎஸ்சி தரப்பில் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பட்டியலை மாநில அரசு ஏற்க மறுத்து யுபிஎஸ்சி-க்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக, புதிய டிஜிபி நியமன விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT