சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ரயில் நிலையங்கள், தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க சென்னை ரயில்வே கோட்டம் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம், குரோம்பேட்டை, பெரம்பூா், திருவள்ளூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையப் பகுதியில் மழைநீா் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் மின்மோட்டாா் மூலம் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ள தண்டவாளங்களில் தண்ணீா் தேங்கினால், அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஜேசிபி இயந்திரம், மணல் மூட்டைகள் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் அருகேயுள்ள கால்வாய்களில் மழைநீா் சீராகச் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன.
தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும், அவசர கால பணிகளை ஒருங்கிணைக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.