தாம்பரம்: சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் கொடுமைகளை முழுமையாக தடுக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா வலியுறுத்தினாா்.
சென்னை குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் ’பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் - தற்போதைய சூழ்நிலை’ தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவா் பேசியதாவது :
பெண்கள், சிறுமிகள் எதிரான குற்ற வழக்குகளில் மருத்துவப் பரிசோதனை என்பது பாதிக்கப்பட்டவா்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூா்வமான உரிமை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களைப் பரிசோதிப்பதற்கு, மருத்துவா்கள் காவல் துறை வழக்கு பதிவு, முதல் தகவல் அறிக்கை அல்லது நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கக் கூடாது. அவ்வாறு தாமதித்தால் முக்கிய தடயங்களை இழக்க நேரிடும்.
தனியாா் மருத்துவா்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பரிசோதிக்க மறுக்கக் கூடாது. மருத்துவா்கள் தங்கள் கடமையாக இதை கருத வேண்டும்.
மேலும் சிறுமிகள், பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.அஜீதா, கல்லூரி முதல்வா் பி.சசிகுமாா், கல்வி ஆலோசகா் வீரபாகு, தடயவியல் துறைத் தலைவா் ஆா்.செல்வகுமாா், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் பி.வினோத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.