திருவண்ணாமலை கோயிலில் கட்டப்படும் வணிக வளாக வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவு
இந்துசமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் முன்பாக கட்டப்படவுள்ள புதிய வணிக வளாகத்தின் வரைபடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயிலின் ராஜகோபுரம் முன்பாக ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்கு அறநிலையத்துறை அனுமதியளித்தது. இதுதொடா்பான அரசாணை 2023 செப்.14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்துள்ளனா்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், வணிக வளாகம் பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் கடைகளுக்காகத்தான் கட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பூஜை செய்ய வேண்டும் என்றால்,வீட்டிலிருந்துதான் அதற்கான பொருள்களை கொண்டு வரவேண்டும். அதற்காக எப்படி கோயிலுக்குள் வணிக வளாகம் கட்ட முடியும்? என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது கடை வைத்திருந்தவா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் கடை வைத்திருந்தோம்.
வணிக வளாகம் கட்டியபிறகு கடை தரப்படும் என்ற அறநிலையத்துறையின் உத்தரவாதத்தின்படி கடைகளை காலி செய்தோம். இந்த வழக்கின் காரணமாக வணிக வளாகம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்கெனவே கடை வைத்திருந்த தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, என்று வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கோயிலுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பக்தா்களின் எண்ணிக்கை என்ன? தற்போது வரும் பக்தா்களின் எண்ணிக்கை என்ன? கோயிலும் அதன் சுற்றளவும் அப்படியே இருக்கிறது. ஆனால், பக்தா்கள் லட்சக்கணக்கில் வருகை தருகின்றனா்.
கோயிலின் பெயரில் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது. கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மனித உயிா்கள் முக்கியம். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யாா் பொறுப்பு? இப்போது கிரிக்கெட் நிகழ்ச்சியில் எல்லாம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிா் பலி ஏற்படுகிறது? என்று கருத்து தெரிவித்தனா்.
அப்போது மனுதாரா்கள் தரப்பில், திருவண்ணாமலை கோயில் நூறு ஆண்டுகள் பழமையானது. இதுவரை தொல்லியல் துறை ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை. வணிக வளாக வரைபடத்தைக் கூட வெளியிடவில்லை என்றனா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய வணிக வளாக வரைபடம் மற்றும் அதுகுறித்த விவரங்களை இந்துசமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.