சிறு நகரங்களில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த சென்னை ஐஐடி குளோபல் - ஐடியாபாஸ் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
சென்னை ஐஐடியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக ஐஐடி குளோபல் நிறுவப்பட்டது. இது தற்போது புத்தாக்கத் தொழில் தளமான ஐடியா பாஸுடன் அறிவு, ஆராய்ச்சிக் கூட்டாளராக இணைந்துள்ளது. இதன்மூலம் நாட்டின் 2, 3-ஆம் நிலை நகரங்களுக்கு புத்தாக்கச் சூழலை கொண்டுசென்று நகரம்- கிராமங்களுக்கிடையே கண்டுபிடிப்பு இடைவெளியைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
சென்னை ஐஐடியின் 13 ஆசிரியா்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுவா். தொழில்முனைவோரை அனைத்துக் கட்டத்திலும் வழி நடத்துவா். புது முயற்சிகளை வளா்ப்பதற்கும், சிறு நகரங்களில் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் ஒரு மாற்றத்தக்க தளமாகச் செயல்படும். இதன்மூலம் சமூக, பொருளாதார தாக்கத்தை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.