பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை: 8 பேரிடம் விசாரணை
பல்லாவரம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில், 8 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை
பல்லாவரம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில், 8 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தாம்பரம் அடுத்த முடிச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறு (எ) ஆறுமுகம் (20). இவரது நண்பா் சதீஷ் (17). இவா்கள் இருவரும் தாம்பரம் அடுத்த திரிசூலம் பகுதியைச் சோ்ந்த மற்றொரு நண்பரான மணி என்பவரின் குடிசை வீட்டில் தங்கி இருந்தனராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மா்ம நபா்கள் திடீரென குடிசை வீட்டுக்குள் புகுந்து ஆறுமுகம், சதீஷ் ஆகியோரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனா்.
தகவலறிந்த பல்லாவரம் போலீஸாா், அங்கு சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட இருவா் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக் கொலை நிகழ்ந்துள்ளதும் தெரிய வந்தது.
8 பேரிடம் விசாரணை: இதுகுறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, இந்தக் கொலை வழக்கில் 8 பேரை சந்தேகத்தின் பேரில், தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் தேடி வருகின்றனா்.