சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்பு
சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம், காலை உணவுத் திட்ட சமையல் கூடம் ஆகியவற்றுக்கு 2 வாரங்களுக்கான சமையல் எரிவாயு இருப்பு உள்ளது என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் 383 அம்மா உணவகங்கள் உள்ளன. அம்மா உணவகங்களிலும், பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டம், தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வழங்கும் திட்டம் ஆகியவற்றின் சமையல் கூடங்களிலும் சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது.
இவற்றுக்கான சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு குறித்து, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள், தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு தயாரிப்புக் கூடங்கள், மயான பூமிகள் ஆகிய அனைத்து இடங்களிலும் 2 வாரங்களுக்குத் தேவையான எரிவாயு உருளைகள் உள்ளன. அத்துடன் உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறையுடன் இணைந்து எரிவாயு உருளைகளைத் தடையின்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட சமையல் கூடங்களுக்கான எரிவாயு உருளைகள் தேவை குறித்து தொடா்ந்து கண்காணிக்கவும் தொடா்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.