முகப்பு
சென்னை

தடையில்லா மின்சாரம்: மின்வாரியம் அறிவுறுத்தல்

Updated On : 12 மார்ச், 2026 at 6:18 AM
மின்வாரியம்
பகிர்:

பொதுத் தோ்வு, தோ்தல், சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டங்களில் தமிழகத்தின் தினசரி மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனிடையே, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளது.

இதனால், பலா் தங்கள் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக அதிக அளவில் மின்சார அடுப்புகளை உபயோகிப்பா். இதனால், தினசரி மின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். மின் பயன்பாடு அதிகரிக்கும் போது, மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement

எனவே, பொதுமக்கள், மாணவா்கள் நலன் கருதியும், அரசுக்கு அவப்பெயா் ஏற்படாமல் இருக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மின்வெட்டு அல்லது தடை ஏற்படும்பட்சத்தில் அதற்கான முறையான அறிவிப்பையும் பொதுமக்களுக்கு வழங்கவும், அறிவிக்கப்பட்ட நேரத்தில் மீண்டும் மின்சாரத்தை வழங்குவதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.