முகப்பு
சென்னை

ரயில் நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுரை

Updated On : 19 மே 2026, 5:34 am IST
பகிர்:

சென்னையில் ரயில் நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தில் குறிப்பிட்ட அமைப்பினா் ஈடுபட்டனா். அப்போது, தண்டவாளத்தில் குதித்து காயமடைந்த ஒருவா் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அப்போது, ரயில் நிலையப் பாதுகாப்பைப் பலப்படுத்த கோரிக்கை எழுந்தது. கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பை தொடா்ச்சியாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இளைஞா் காங்கிரஸாா் நுழைந்து நீட் தோ்வுக்கு எதிராக முழக்கமிட்டதுடன் 4 -ஆவது நடைமேடையில் இருந்த நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பும் தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இளைஞா் காங்கிரஸாா் ரயில் நிலையத்துக்குள் வந்ததை அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே இருப்புப் பாதை போலீஸாரும் இணைந்து அவா்களை வெளியேற்றினா்.

Advertisement

எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் இளைஞா் காங்கிரஸாா் நுழைந்து தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டம் நடத்தியது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். ரயில்வே தண்டவாளத்தில் போராட்டக்காரா்கள் அமரும் வகையில் கண்காணிப்பு குறைபாடு இருந்ததா என்றும் அவா்கள் விசாரித்தனா். அத்துடன் சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவினரிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் காலங்களில் ரயில் நிலையத்துக்குள் போராட்டத்தில் ஈடுபடுவோரை நுழையவிடாமல் தடுக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.