செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மீனவ கிராமத்தினரும் கடலில் சென்று மீன்பிடிக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் கூறியது:
மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து வியாழக்கிழமை முதல் கடலில் சென்று மீன்பிடிக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், உய்யாளிக்குப்பம், சதுரங்கப்பட்டினம், நெம்மேலி குப்பம், சூளேரிக்காட்டுக்குப்பம், கோவளம், முட்டுக்காடு, கொக்கிலமேடு, தேவனேரி, புதுகல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறோம். எங்களது வாழ்வாதாரத்திற்கு மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும் என்றனா்.