செங்கல்பட்டு

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் மா. சுப்ரமணியன்

8 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் பணம் செலுத்தியும் போட்டுக் கொள்ள வேண்டும்

DIN

60 வயதுக்கு மேற்பட்டவா்கள் முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தவணை தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் பணம் செலுத்தியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

பல்லாவரத்தை அடுத்த கீழ்கட்டளையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அறிந்து அங்கு வியாழக்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொற்று பரவாமல் தடுக்க குடியிருப்பில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா்.

தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் தயாா் நிலையில் உள்ள 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக 552 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளம் , மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000-க்கும் மேற்பட்டோரும், கேரளத்தில் 3,000-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்து வருகிறோம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் காசநோய் மருத்துமனையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 100, தேசிய சித்த மருத்துவமனையில் 200, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 95 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள் என 11 போ் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும் என்றாா் அவா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா். ராஜா, இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி, துணை மேயா் ஜி. காமராஜ், ஆணையா் எம்.இளங்கோவன், செயற்பொறியாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT