செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் ராட்டினம் கிணறு ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பலியாகினர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ராட்டினம் கிணறு ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பலியாகினர்.
செங்கல்பட்டு மாவட்டம், நரப்பாக்கம், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் ஜோதி பிரகாஷ்(40), செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சாத்தமங்கலம் கிராமம் பல்லத் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் நந்தகோபால்(51). இவர்கள் இருவரும் சென்னை பல்லவன் மாநகரப் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இருவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு ராட்டினம் கிணறு திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு மேம்பாலத்திலிருந்து செங்கல்பட்டு நகருக்குள் திரும்பும்போது, திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பின்னால் வந்த லாரி செங்கல்பட்டு நகரில் மதுராந்தகம் செல்லும் சாலையில் திரும்புவதற்காக யு டர்ன் போடும்போது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் நந்தகோபால் சம்பவ இடத்திலேயே பலியானர்.
காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஜோதி பிரகாஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் உடன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.