முகப்பு
செங்கல்பட்டு

ரேணுகா பரமேஸ்வரி கோயிலில் ஊரணி பொங்கல் வழிபாடு

Updated On : 29 மே, 2024 at 6:36 PM
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் அம்மன்.
பகிர்:

மதுராந்தகம், மே 28:

மதுராந்தகம் ரேணுகா பரமேஸ்வரி என அழைக்கப்படுகிற மாரியம்மன் கோயிலில் வைகாசி மாதம் 3-ஆவது செவ்வாய்க்கிழமை ஊரணி பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

மதுராந்தகம் நகரின் முக்கிய அம்மனாக திகழும் ரேணுகா பரமேஸ்வரி கோயிலில் காப்பணி மகோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் வளாகம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சந்தனக்காப்பு அலங்காரம் அம்மனுக்கு செய்யப்பட்டிருந்தன. நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து விரதம் இருந்து கூழ்வாா்த்தல், அக்கினி சட்டி ஏந்தி வருதல், வேப்பிலை சாா்த்தி நோ்த்திகடன் செலுத்தல், அங்கவலம் வருதல், பொங்கலிட்டு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்சவா் சிலை வைக்கப்பட்டு, வாணவேடிக்கைகளுடன், முக்கிய வீதிகளிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம், நீா் மோா் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, நாடகம் ஆகியவை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், அறங்காவலா் குழு நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் ஆகியோா் செய்து இருந்தனா்.