செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியா்கள் கல்வி உதவித்தொகை 1-5 வகுப்பு பயிலுவோருக்கு ரூ.2,000-ம், 6-8 வகுப்பு பயிலுவோருக்கு ரூ.6,000-ம், 9-12 வகுப்பு பயிலுவோருக்கு ரூ.8,000-ம், பட்டப்படிப்பு பயிலுவோருக்கு ரூ.12,000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.14,000-ம் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், வாசிப்பாளா் உதவித்தொகை 9-12ம் வகுப்பு பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.3,000-ம், இளங்கலைப் பட்டம் பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.5000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும்பாா்வையற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ரூ.6000-ம் வாசிப்பாளருக்கு வழங்கப்படும்.
இவ்வுதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம்வாய்ந்த தேசிய அடையாள மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம்-1, கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்படும் கல்விச்சான்று போன்றவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.