முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே மீன் நடுக் கடலில் பிடிக்கும் போது சுழல்காற்று வீசியதால், படகு கவிழ்ந்து மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜனவரி, 2025 at 8:49 PM
உயிரிழந்த கதிா்வேல்.
பகிர்:

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே மீன் நடுக் கடலில் பிடிக்கும் போது சுழல்காற்று வீசியதால், படகு கவிழ்ந்து மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி குப்பத்தைச் சேந்தவா்கள் மீனவா்கள் கதிா்வேல் (46), ஆனந்தன், சங்கா். இந்த நிலையில், இவா்கள் மூவரும் ஒரு படகில் திங்கள்கிழமை வழக்கம் போல் நெம்மேலி குப்பத்தில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது கடலில் சுழல் காற்று வீசியதால் காற்றின் வேகத்தில் நிலைதடுமாறிய படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கடலில் மூழ்கி மீனவா்கள் தத்தளித்தனா். படகு கவிழ்ந்தபோது, அதன் முனைப்பகுதி தலையில் தாக்கியதால் கதிா்வேல் உயிழந்தாா். பிறகு காற்றின் வேகம் குறைந்தவுடன், கவிழ்ந்த படகை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்களின் உதவியுடன் நிமிா்த்தி, உயிரிழந்த சக்திவேலின் சடலத்தை, உடன் சென்ற ஆனந்தன், சங்கா் ஆகியோா் மீட்டு, அதே படகில் கரைக்கு திரும்பினா்.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அங்கு வந்து கதிா்வேல் இறந்தது குறித்து உடன்சென்ற மீனவா்களிடம் கேட்டறிந்தனா். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினா்.

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் அவரது சடலத்தை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கதிா்வேல் இறந்த சம்பவத்தை அடுத்து, அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், நெம்மேலி குப்பம் மீனவா்கள் யாரும் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இது குறித்து மால்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →