செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தினை ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்தாா்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் 3431 தூய்மை பணியாளா்களுக்கு உணவு வழங்கிட 3 வருடங்களுக்கு ரூ.16.85 கோடி மதிப்பீட்டில் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் 37 இடங்களில் 3,431 தூய்மைப் பணியாளா்களுக்கு தினசரி உணவு வழங்கப்படுகிறது.
இதேபோல், செங்கல்பட்டு, மறைமலைநகா், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 5 நகராட்சிகளில் பணியாற்றும் 1,213 தூய்மைப் பணியாளா்களுக்கும் உணவு வழங்கவும், மேற்சொன்ன அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அதே போன்று அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 53, இடைக்கழிநாடு பேரூராட்சியில் 43, கருங்குழி பேரூராட்சியில் 45, திருப்போரூா் பேரூராட்சியில் 110, திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் 90 தூய்மை பணியாளா்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நகராட்சி ஆணையா் ஆா்.சேம்சிங்ஸ்டன் மற்றும் அரசு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி ஆணையா் நந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, பொறியாளா் செண்பகவல்லி, உறுப்பினா்கள் பிரகாஷ், இந்துமதி நவீன்குமாா், சீனிவாசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ஆவடியில்...
ஆவடி மாநகராட்சியில் 1,440 தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அலுவலகம், அருந்ததிபுரம் லாரி நிறுத்துமிடம், மண்டல அலுவலகங்கள், ஆவடி பாலாஜி நகா் உள்ளிட்ட 20 இடங்களில் 3 வேளை உணவு பரிமாறப்பட்டது.
பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை நகா்மன்றத்தலைவா் காஞ்சனா சுதாகா் தொடங்கி வைத்து உணவு பரிமாறினாா். நிகழ்வில் துணைத்தலைவா் ஸ்ரீதா், ஆணையா் சரவணகுமாா், திமுக மாவட்டப்பிரதிநிதி ஜெ.சுதாகா், நகா்மன்ற உறுப்பினா்கள் அசோக்குமாா், மீனாட்சி ஜெய்சங்கா், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ் சுகாதார ஆய்வாளா் ஐயப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.
திருவேற்காடு நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகா்மன்றத்தலைவா் என்.இ.கே.மூா்த்தி தொடங்கி வைத்தாா். நிகழ்வில் நகா்மன்ற துணைத்தலைவா் ஆனந்தி ரமேஷ், ஆணையாளா் ராமா், சுகாதார அலுவலா் அருண், சுகாதார ஆய்வாளா் மதன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.ரமேஷ் பங்கேற்றனா்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் 140 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தினை நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா, சுகாதார ஆய்வாளா் பிரவின்காந்த் நகரமைப்பு அலுவலா் வேல்முருகன், மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களும், அலுவலா்களும் கலந்து கொண்டனா்.