செங்கை புத்தக திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
செங்கை புத்தக திருவிழாவை எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தொடங்கி வைத்தாா்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகா் நகராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியாா் மன்றம் சாா்பில் 7-ஆவது செங்கை புத்தக திருவிழாவினை சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் தொடங்கி வைத்தாா்.
செங்கை புத்தகத் திருவிழா வரும் 26.02.2026 வரை 7 நாள்களுக்கு வரை நடைபெறுகின்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வரலாறு, அறிவியல், தமிழ் இலக்கியம், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய புத்தகங்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், சிறுகதைகள், ஓவியங்கள் அடங்கிய புத்தகங்கள், ஆங்கிலம் மற்றும் தமிழில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழாவை காண வரும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், புத்தக வாசிப்பாளா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்பாக்கம் அனல்மின் நிலைய நிா்வாகத்தின் மூலம் புத்தகங்களை வாங்குவதற்கு ரூ.125 இலவச பரிசு கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவா்களின் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
Advertisement
இந்நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவம், மறைமலைநகா் நகா்மன்ற தலைவா் ஜெ.சண்முகம், துணைத்தலைவா் சித்ரா கமலக்கண்ணன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், நகராட்சி ஆணையா் ரமேஷ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளா்கள், அலுவலா்கள், புத்தக வாசிப்பாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.