சென்னை, ஆக. 9: மாணவர்களின் தற்கொலை எண்ணம், மன அழுத்தத்தைப் போக்கி படிப்பில் கவனம் செலுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள சுமார் 3,500 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தோல்வி பயம், தேர்வில் தோல்வி, பெற்றோர், ஆசிரியர் திட்டுவதால் மாணவர்கள் பயந்து போய் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் குடும்பச் சூழ்நிலையால் மன அழுத்தம் போன்ற உளவியல் ரீதியான பிரச்னைக்கு ஆளாகின்றனர்.
இப் பிரச்னைகளில் இருந்து மாணவர்களை மீட்டு, படிப்பில் கவனத்தைச் செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இப்பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உளவியல் பயிற்சி கையேடு: இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய மனோதத்துவ நிபுணர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் பயிற்சி வழங்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி தொடர்பான கையேடும் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். உளவியல் பயிற்சி தொடர்பான கையேடு தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
தனி குழு...: இதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்கென மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் மணி ஆலோசனையில் பேரில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுபற்றியும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாணவிகளுக்காக...: மாணவிகளின் பிரச்னை குறித்து நட்பு ரீதியாகப் பேசி ஆலோசனை வழங்க உளவியல் பயிற்சி பெற்ற ஆசிரியைகள் நியமிக்கப்படுவர். அடுத்த 2 மாதங்களில் இந்த உளவியல் பயிற்சி அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.