முகப்பு
சென்னை

தலைவர் இல்லாத மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம்!

சென்னை, ஜூலை 19:  மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.   இதனால், 18 மாவட்டங்களில் குறைதீர் மன்ற தலைவர்களை

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:48 PM
பகிர்:

சென்னை, ஜூலை 19:  மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

  இதனால், 18 மாவட்டங்களில் குறைதீர் மன்ற தலைவர்களை நியமிப்பதில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிக்கல் தொடர்கிறது.

  நுகர்வோர் தொடர்பான பிரச்னைகளையும் குறைகளையும் களைந்து, அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்யும் வகையில் தொடங்கப்பட்டது நுகர்வோர் குறைதீர் மன்றம்.

  மாநில அளவில் இதன் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், மாவட்ட அளவில் மூத்த வழக்கறிஞர்கள் அல்லது வழக்கறிஞர் சங்கப் பிரதிநிதிகள் தலைவர்களாக இருப்பார்கள்.

  அதிமுக ஆட்சியில்...  அதிமுக ஆட்சியின் போது, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவராக, நீதிபதி சம்பத் இருந்தார். அப்போது, மாவட்ட அளவிலும் நீதிபதிகளையே தலைவர்களாக நியமிக்க வேண்டும் என்ற புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது.

  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு தரப்பும் மாவட்ட அளவில் தலைவர்களாக நியமிக்கப்படலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

  இதனிடையே, கடந்த 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவராக நீதிபதி கண்ணதாசன் நியமிக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவரது நியமனத்தை அரசு நிறுத்தியது.

  இதன் பின், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் நியமனம் செய்யப்படவே இல்லை.

  18 மாவட்டங்களில் சிக்கல்...  தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நியமிக்கப்படவில்லை.

  ""மாநில அளவில் குறைதீர் மன்றத்துக்கு தலைவர் நியமிக்கப்பட்ட வேண்டும். அவர், மாவட்டங்களுக்கு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார். மாநில அளவில் தலைவரைத் தேர்ந்தெடுக்க தொடர்ந்து சிக்கல் எழுந்த நிலையில், மாவட்டங்களுக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை'' என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  நீதிபதி குலசேகரன் நியமனம்...  இந்த சிக்கலைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற குலசேகரன் நியமிக்கப்பட்டார்.

  ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனால், 18 மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர்களை நியமிப்பதில் உள்ள சிக்கல் தொடர்கிறது. மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்றத்திடம் பட்டியலைப் பெற்று, அதிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு மேலும் சில காலம் ஆகும் என்று உணவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.