பிஎஸ்எல் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய ஃபஹர் ஸமான்..! 5 ரன்கள் பெனால்டி!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பந்தைச் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது குறித்து...
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பந்தைச் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. லாகூர் கலந்தர்ஸ் அணியின் வீரர் ஃபஹர் ஸமான் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டினை பாகிஸ்தான் வீரர் ஃபஹர் ஸமான் முழுமையாக மறுப்புத் தெரிவித்துள்ளார். இருந்தும் இதற்காக 5 ரன்கள் பெனால்டியாக எதிரணிக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலந்தர்ஸ் அணியும் கராச்சி கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 128/9 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய கராச்சி கிங்ஸ் 19.3 ஓவர்களில் 131/6 ரன்களில் வென்றது. 19 ஓவர் முடிவில் 115/5 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த ஓவருக்குப் பிறகு கேப்டன் ஷாஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் உடன் ஃபஹர் ஸமான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். அப்போது ஃபஹர் ஸமான் பந்தினை வாங்கி அழுத்திக் கொடுப்பார்.
பிறகு, நடுவர் பந்தினை வாங்கி சோதித்துப் பார்த்ததில் பந்து சேதமடைந்ததால் கராச்சி அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது.
அதன்பிறகு விக்கெட், ஒயிட், 4, 6 என மூன்று பந்துகளில் கராச்சி அணி வென்றது. பிஎஸ்எல் விதி 41.3ன் படி லெவல் 3 குற்றத்தில் ஃபஹர் ஸமானுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
48 மணி நேரத்தில் நடுவருடன் இந்த விவாகாரம் குறித்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகார் உறுதியானால், லாகூர் அணியும் பஹர் ஸமானும் கடுமையான பிரச்னைகளை சந்திக்கக்கூடுமென்பது குறிப்பிடத்தக்கது.