வி. செந்தில்பாலாஜிக்கு எதிராக வி. செந்தில்குமாரை களமிறக்கிய தவெக!
கோவை தெற்கில் களமிறக்கப்பட்டுள்ள தவெகவின் வி. செந்தில்குமார் பற்றி...
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜிக்கு எதிராக தவெக தரப்பில் வி. செந்தில்குமார் என்ற வேட்பாளரை களமிறக்கியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. கடந்தாண்டு கரூரில் நடைபெற்ற தவெக விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் 42 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு காரணமாக, தவெக தலைவர் விஜய்க்கு ஒரு தரப்பினரும், திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜிக்கு மற்றொரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சொந்த தொகுதியான கரூரை விட்டுவிட்டு கோவை தெற்கில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியது.
கரூர் சம்பவத்தில் கிளம்பிய எதிர்ப்பால் செந்தில்பாலாஜி தொகுதி மாறியதாக என்று எதிர்க்கட்சிகளும், கோவை தெற்கில் முதல்முறையாக திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர் தொகுதி மாறியதாக ஆளுங்கட்சி தரப்பும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெகவின் கோவை தெற்கு வேட்பாளராக அக்கட்சியின் நிர்வாகி வி. செந்தில்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, மக்களவை உள்ளிட்ட தேர்தல்களில் நட்சத்திர வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளை சிதற வைக்கும் நோக்கத்தில், அவர்கள் பெயர்களில் பல சுயேச்சைகள் போட்டியிடுவது தொடர் கதையாக உள்ளது.
கோவை தெற்கில் களமிறக்கப்பட்டுள்ள தவெக வேட்பாளர் வி. செந்தில்குமார், வி. செந்தில்பாலாஜியின் வாக்குகளை பிரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை தெற்கில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவின் வானதி சீனிவாசன். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு கோவை தெற்கும், பாஜகவுக்கு கோவை வடக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை கோவை வடக்கில் வென்ற அம்மன் அர்ஜுனன், தற்போது கோவை தெற்கின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.