முகப்பு
சென்னை

அரசு பொது மருத்துவமனைக்கு 13 நாள்களுக்கு "டீன்'!

சென்னை, மே 19: சென்னை அரசு பொது மருத்துவமனையின் புதிய முதல்வராக ("டீன்') டாக்டர் எம். ஜெயராமன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.   அவர் 13 நாள்களுக்கு மட்டும் இந்தப் பொறுப்பில் இருப்பார். ஏனெனில் வரும்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:54 PM
பகிர்:

சென்னை, மே 19: சென்னை அரசு பொது மருத்துவமனையின் புதிய முதல்வராக ("டீன்') டாக்டர் எம். ஜெயராமன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

  அவர் 13 நாள்களுக்கு மட்டும் இந்தப் பொறுப்பில் இருப்பார். ஏனெனில் வரும் 31-ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.

  சென்னை அரசு பொது மருத்துவமனை மட்டுமின்றி மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைகளிலும் முதல்வர் பொறுப்புக்கு சில நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு மட்டுமே நியமிக்கப்படும் நிலை தொடருகிறது.

Advertisement

  கடந்த 4 மாதங்களில்...: சென்னை அரசு பொது மருத்துவமனையின் முதல்வராக இருந்த டாக்டர் டி. பி. கலாநிதி, இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்ததால் "ஓய்வுபெற அனுமதி' என்ற சொற்றாடரை அரசு பயன்படுத்தி அவரைப் பணியிலிருந்து விடுவித்தது.

  அதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் தனபால் அரசு பொது மருத்துவமனையின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் கடந்த மார்ச் 31-ம் தேதி ஓய்வு பெற்றார்.

  இதைத் தொடர்ந்து டாக்டர் சி.ராஜேந்திரன், சென்னை அரசு பொது மருத்துவமனையின் டீன் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். அவர் வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து பால்வினை நோய் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் கே. கஜேந்திரன் டீன் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

  புகழ் மிக்க சென்னை அரசு பொது மருத்துவமனையின் டீன் பதவியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக டாக்டர் ஜெயராமன் புதிய முதல்வராக 13 நாள்களுக்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

  மதுரை, கோவை, திருநெல்வேலி:  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் டீன் பொறுப்பை கடந்த 2 ஆண்டுகளாக டாக்டர் சிவக்குமார் வகித்து வருகிறார். கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையின் டீன் பொறுப்பை கடந்த ஓராண்டாக டாக்டர் குமரன் வகித்து வருகிறார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் டீன் பொறுப்பை கடந்த 8 மாதங்களாக டாக்டர் ஏ. கனகராஜ் வகித்து வருகிறார்.

  அரசியல் தலையீடு காரணமா? ""இத்தகைய டீன் பொறுப்பு குளறுபடிகளுக்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

  ஏழை மக்களும் குறைந்த வருவாய்ப் பிரிவினரும் அரசு மருத்துவமனைகளைத்தான் முழுமையாக நம்பியுள்ளனர். மருத்துவமனை "டீன்' பதவிக்கு நிர்வாகத் திறன் கொண்ட டாக்டர்களை நீண்ட காலத்துக்கு நியமிப்பதன் மூலம் மட்டுமே பொது மக்களுக்கு சிறந்த சேவை கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்'' என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.