அதிக கட்டண புகார்: கல்லூரிகளில் ஆய்வும், நடவடிக்கையும் துரிதமாகுமா?
சென்னை, ஆக. 27: அதிக கட்டண வசூல் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட கல்லூரிகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு, புகார் தெரிவித்த மாணவர் மற்றும் பெற்றோரிடையே எழுந்துள்ளது. தமிழகத்தி
சென்னை, ஆக. 27: அதிக கட்டண வசூல் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட கல்லூரிகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு, புகார் தெரிவித்த மாணவர் மற்றும் பெற்றோரிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படும் பொறியியல் கல்லூரிகள் மீது ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் துணைத் தலைவர் எம்.எஸ். பழனிச்சாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில் எம்.எஸ். பழனிச்சாமி, மாநில தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உறுப்பினர் செயலர் சபியுல்லா மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் ஆகிய மூவரும் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேறு இருவர் குழுவில் இடம்பெற்றிருப்பர்.
Advertisement
புகார் தெரிவிக்கப்படும் கல்லூரிகள் மீது இந்த 5 பேர் குழு ஆய்வு மேற்கொள்ளும். நிரந்த உறுப்பினர்கள் மூவரும் இடம்பெற்றிருக்கும்போதுதான் ஆய்வுக்கு செல்லவேண்டும் என்பது விதி.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது முதல் தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் என மூன்று துறைகளிடமும், தமிழகம் முழுவதும் உள்ள 36 கல்லூரிகள் மீது அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதில் சிலர் விடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்து, கல்லூரிகள் அனைத்தும் தொடங்கி விட்ட நிலையில், இதுவரை 6 கல்லூரிகளில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசிடம் இக்குழு சமர்ப்பித்துள்ளது. மேலும் 30 கல்லூரிகள் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இந்த மெத்தனப்போக்கால், கல்லூரிகள் மீதான ஆய்வும், நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக அரசு கூறுவது வெறும் கண் துடைப்பு நாடகமா? என்ற சந்தேகத்ம் மாணவர் மற்றும் பெற்றோரிடையே எழுப்பியுள்ளது.
ஆய்வுக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஒருவர், அலுவலக பணிச் சுமை காரணமாக குழுவில் இடம்பெற முடியாமல் இருப்பதே, கல்லூரிகள் மீதான ஆய்வு இழுபறிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அதிகாரி ஒருவர் கூறியது:
அலுவலகப் பணிச் சுமை காரணமாக நிரந்தர உறுப்பினர் ஒருவர் குழுவில் தொடர்ந்து இடம்பெறாமல் போனதால், ஆய்வில் சுணக்கம் ஏற்பட்டது.
இப்போது அந்த நிரந்தர உறுப்பினர் இல்லாமலே ஆய்வுக்கு செல்ல தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் மற்ற கல்லூரிகளிலும் விரைவில் ஆய்வு மேற்கொண்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இப்போதும் கல்லூரிகள் மீது புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தப் புகார்களை தொலைபேசி மூலமே தீர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். சென்னையில் ஒரு கல்லூரியிலும், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியிலும் இதுபோல் தொலைபேசி மூலம் தீர்வு கண்டுள்ளோம்.
தீர்வு கண்ட மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அந்த கல்லூரிகளால் பிரச்னை ஏற்பட்டாலும், அதுகுறித்தும் தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் புகார் தெரிவிக்கலாம். கல்லூரிகளில் ஏற்கெனவே இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு படித்துவரும் மாணவர்களும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.