புறநகர் ரயில் பயணிகளைக் கவராத தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள்
சென்னை, ஜூன் 19: சென்னை புறநகர் மின் ரயில் நிலையங்களில் தானியங்கி முறையில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் போதிய பயன்பாடு இல்லாததால் நினைவுச் சின்னங்களாக மாறி வருகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தா
சென்னை, ஜூன் 19: சென்னை புறநகர் மின் ரயில் நிலையங்களில் தானியங்கி முறையில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் போதிய பயன்பாடு இல்லாததால் நினைவுச் சின்னங்களாக மாறி வருகின்றன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் டிக்கெட் பெறுவதற்காக கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாகக் கோரி வந்தனர்.
தொடுதிரை வசதியுடன்...
இதையடுத்து, புறநகர் மின் ரயில் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் தானியங்கி முறையில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.
தொடுதிரை வசதியுடன் கூடிய இந்த இயந்திரத்தில் அனைத்து புறநகர் மின் ரயில்களிலும் பயணம் செய்ய, முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை 24 மணி நேரமும் பெறலாம்.
இதில் பயன்படுத்துவதற்காக ஏ.டி.எம். அட்டையைப் போன்ற ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது. ரயில் நிலையங்களில் ரூ. 50 முதல் ரூ. 500 வரை மதிப்புள்ள, 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஸ்மார்ட் கார்டுகளை பயணிகள் பெறலாம். குறிப்பிட்ட கால அளவுக்குள் இந்த ஸ்மார்ட் கார்டை புதுப்பிக்க டாப்-அப் கார்டுகளையும் (ரூ. 50 முதல் அதிகபட்சம் ரூ. 500 வரை) பெறலாம்.
பயணிகள் ரூ. 100 செலுத்தி ஸ்மார்ட் கார்டு பெற்றால், ரூ. 105 மதிப்புள்ள டிக்கெட்டுகளைப் பெறலாம் என்ற சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள 40 புறநகர் மின் ரயில் நிலையங்களில் இப்போது தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளபோதும், ஸ்மார்ட் கார்டு திட்டம் இன்னமும் பெரும்பாலான பயணிகளைக் கவராத நிலை தொடர்கிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (எம்.எம்.சி.) வேலை தேடும் இளைஞர்கள் இந்த ஸ்மார்ட் கார்டுகளை தங்களது சொந்த செலவில் பெற்று, இயந்திரங்களை இயக்கி பயணிகள் விரும்பும் இடங்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை எடுத்து தருகின்றனர்.
இதற்காக ரூ. 100 மதிப்புள்ள ஸ்மார்ட் கார்டு பெற்றால் இவர்களுக்கு ரூ. 5 மட்டும் வருவாயாக (கமிஷன் தொகையாக)கிடைக்கிறது. ரயில்வே அலுவலர்களின் அனுமதியுடன் சென்ட்ரல் உள்ளிட்ட ஓரிரு நிலையங்களில் மட்டுமே இந்தச் சேவை தொடர்கிறது. ஆனால், ஸ்மார்ட் கார்டு திட்டம் இன்னமும் ஏராளமான பயணிகளைக் கவராததால், பல்வேறு இடங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள், காட்சிப் பொருளாக மாறி வருகின்றன.