முகப்பு
சென்னை

இரண்டு சிம் கார்டு செல்போன்களின் விற்பனை அமோகம்!

சென்னை, நவ. 6: கடந்த சில வாரங்களாக இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.  இதனால், செல்போன் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன், செல்போன் தயாரிப

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:02 PM
பகிர்:

சென்னை, நவ. 6: கடந்த சில வாரங்களாக இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

 இதனால், செல்போன் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடையே போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.

 மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) கொண்டு வந்த எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடே இரண்டு சிம் கார்டுகள் வசதி கொண்ட செல்போன்களின் அமோக விற்பனைக்குக் காரணம் என பெரும்பாலான விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

 ஒரு நாளைக்கு ஒரு சிம் கார்டில் இருந்து 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்ப முடியும் என்கிற விதியை தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் செப்டம்பர் மாததம் கொண்டு வந்தது. இதனால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்.க்கும் மேல் அனுப்புவர்கள் இரண்டு சிம் கார்டுகள் கொண்ட செல்போன்களை நாடினர்.

 இதனால், செல்போன்களின் விற்பனையும் சிம் கார்டுகளின் விற்பனையும் அதிகரித்தது.

 அக்டோபர் மாதத்தில் இரண்டு சிம்கார்டுகள் கொண்ட செல்போன்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

 இப்போது ஒரு நாளைக்கு 200 எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பலாம் என்று விதியைச் சற்றே தளர்த்தியுள்ளது தொலைத் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையம்.

 ஆனாலும், இரண்டு சிம்கார்டு செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

 இந்தியச் சந்தைக்கு இரண்டு சிம்கார்டுகள் கொண்ட செல்போன்களை முதல் முறையாக சீனா, கொரிய நாடுகளே அறிமுகம் செய்தன. இவை குறைந்த விலையில் விற்பனையானதை அடுத்து பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சாம்சங், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு சிம்கார்டு வசதி கொண்ட செல்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியதில் அவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 இந்த முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் தரமானதாகவும், மலிவான விலையில் கிடைக்கின்றன. இதன் தரத்தினாலும், தொலைத் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையத்தின் எஸ்.எம்.எஸ். கட்டுப்பாட்டினாலும் இரண்டு சிம் கார்டு செல்போன்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

 சையத் ரஷீத், செல்போன் விற்பனையாளர்: "இப்போதெல்லாம் பெரும்பாலான அலுவலகங்கள் தங்களது ஊழியர்களுக்கு சிம் கார்டை கொடுத்துவிடுகின்றன.

 இந்த சிம் கார்டை அலுவலக விஷயங்களுக்கு மட்டும் வைத்துக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்களைப் பேச வேறு ஒரு கார்டை வாங்குகின்றனர்.

 இந்த இரண்டு சிம் கார்டுகளையும் ஒரே செல்போனில் வைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த இரண்டு சிம்கார்டு செல்போனை வாங்குகிறார்கள். மேலும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் எஸ்.எம்.எஸ். அனுப்புவர்கள் இந்த வகையான செல்போன்களை வாங்குகின்றனர். மேலும் இந்தச் செல்போன்கள் ரூ.1500 விலையில் இருந்து கிடைக்கின்றன.

 ஆனால் இந்த வகையான செல்போன்களை மேல்தட்டு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருந்தாலும், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனியாக ஒரு செல்போனையை பயன்படுத்துகின்றனர்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments