முகப்பு
சென்னை

பயன்படுத்தப்படாத உரக் கிடங்கு: வீணாகும் அரசுப் பணம்

பொன்னேரி, செப். 3: பொன்னேரி பேரூராட்சியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை உரமாக மாற்றுவதற்காக கட்டப்பட்ட உரக்கிடங்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது. திருவள்ளூர் மாவட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:44 AM
பகிர்:

பொன்னேரி, செப். 3: பொன்னேரி பேரூராட்சியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை உரமாக மாற்றுவதற்காக கட்டப்பட்ட உரக்கிடங்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அத்துடன் பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் 3 திரையரங்குகள், 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஆகியவையும் உள்ளன.

பொன்னேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேரும் குப்பைகள் பேரூராட்சியில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள் மூலம் காலை மாலை என இருவேளை சேகரிக்கப்பட்டு அவை பொன்னேரி நகரை தழுவியபடி ஓடும் ஆரணி ஆற்றங்கரையோரங்களில் கொட்டப்படுகிறது. பொன்னேரிக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆரணி ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைவதுடன் சுற்றும் சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

உரக்கிடங்கு: பொன்னேரி பேரூராட்சியில் நாள்தோறும் சேரும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பின்னர் அவற்றை உரமாக மாற்றுவதற்காக திருவாயர்பாடி பகுதியில் ஆரணி ஆற்றங்கரையோரம் உள்ள மயானத்தின் அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் செலவில் 5 ஆண்டுகளுக்கு முன் உரக்கிடங்கு கட்டப்பட்டது.

பொன்னேரி பேரூராட்சியில் நாள்தோறும் சேரும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றி அதனை வேளாண் துறையினரிடம் அளிப்பதற்காக கட்டப்பட்ட உரக்கிடங்கு கட்டப்பட்ட நாள் முதல் பயன்பாடின்றி வீணாகக் கிடக்கிறது.

இதன் காரணமாக குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றுவதற்காக உரக்கிடங்கு கட்டப்பட்டதன் நோக்கமே வீணாகியுள்ளது என இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பயன்பாடின்றி வீணாய் கிடக்கும் உரக்கிடங்கின் கட்டடத்தில் பொன்னேரி பேரூராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து அவற்றை தரம் பிரித்து உரமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.